tamilnadu

img

 நவீன சந்தை கூலிகளை உருவாக்கவே.. புதிய கல்வி கொள்கை

 நவீன சந்தை கூலிகளை உருவாக்கவே.. புதிய கல்வி கொள்கை ..!
 -சுபாஷ் 
புதிய கல்விக் கொள்கை2020 என்ற பெயரில் இந்திய கல்வித் துறையை இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னால் இழுத்து செல்லக்கூடிய மனுஅதர்ம  கொள்கையை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு. மத்தியில் ஆளும் பிஜேபி அரசு கொரோனா தொற்றைப் பயன்படுத்தி நாட்டின் பொது நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்தல் , கொடும் சட்டங்களின் மூலம் இயற்கை வளங்களை சூறையாடல் போன்ற பாதக செயல்களை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய கல்வித் துறையை காவிமயமாக, வணிகமயமாக மாற்றும் தேசிய கல்வி கொள்கை என்ற திட்டத்தையும் அமல்படுத்தியுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு 2019 ஜூன் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வரைவானது அப்போது உருவாகிய எதிர்ப்புகளினால் அமல்படுத்தப் படாமல் காலம் தாழ்த்தி பொதுமுடக்க காலத்தில் மக்கள் யாரும் எதிர்த்து போராட வீதிக்கு வரமுடியாத நிலையில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு கூட உட்படுத்தாமல் அவசரகதியில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கொள்கையும் மனுதர்ம கோட்பாடுகளின்படியும்,  உலக வர்த்தக மையத்தின்  நிபந்தனைகளையும் உள்வாங்கி கல்வியை வணிக மயமாக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றில் மிக முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டியவை பின்வருமாறு...
5+3+3+4 :
 ஏற்கனவே நடைமுறையில் உள்ள 10,12 என்பதை  5(மழலைக்கல்வி)+ 3(தொடக்கநிலை)+ 3(உயர் தொடக்க நிலை)+  4(மேல்நிலை) என்று  மாற்றுகிறது. இதில் ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும்  பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். கடைசி 9-12 வரையிலான பருவத்தில் 8 செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என குழந்தை பருவத்தை தேர்வுகளால் களவாடும் திட்டத்தை அமல்படுத்த எத்தணித்துள்ளது மத்திய அரசு. மூன்று வயதிலிருந்து ஒரு குழந்தையின் கல்வி துவங்குவதாக அறிவியல் பூர்வமற்ற ஒரு கொள்கையை மத்திய அரசு தயாரித்துள்ளது.இது பிஞ்சு குழந்தைகளின் உளவியல் மீது நடத்தப்படும் மிகப்பெரும் தாக்குதலாகும்.
 தாய்மொழிக் கல்வியும் மும்மொழிக் கொள்கையும்:
ஐந்தாவது வரை தாய்மொழி கல்வியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள கல்விக் கொள்கை ஒருசேர மும்மொழி கொள்கையையும் திணிக்கிறது. இதன்படி முதல் தாய்மொழி இரண்டாவது பயிற்றுமொழி மூன்றாவதாக ஒரு தேர்வுமொழி  முறையே  பயில வேண்டும் என்று சொல்லிவிட்டு பின் பக்க கதவின் வழியாக சமஸ்கிருதம் மற்றும் இந்தியை திணிக்க முயன்றுள்ளது.  இந்தியா முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பேசுவதற்கான தனி விதிகளை வகுத்து நிதியை ஒதுக்கி ஆய்வுகளை செய்கின்ற மத்திய அரசு அறிவிக்கப்படாத ஒரு அழுத்தத்தை மக்கள் மீது திணித்து உள்ளது. அது , என்னவெனில் இந்தி மொழி பயின்றால் தான் மத்திய அரசு வேலைக்கு செல்ல முடியும் என்ற அழுத்தம். இதுமட்டுமின்றி இந்தியாவில் 3% மக்கள் மட்டும் பேசக்கூட இல்லை. வெறும் ஏட்டளவில் உள்ள சமஸ்கிருதத்தை முக்கியமாக இந்த அறிக்கையில் உயர்த்தி காட்டியுள்ளது.  தேர்வு மொழி பயில வேண்டும் என்று சொல்லக்கூடிய அரசு அதற்கான ஆசிரியர் ஒவ்வொரு பள்ளியிலும் தேவை என்பது சம்பந்தமாக  எந்த தெளிவையும் ஏற்படுத்தவில்லை. 
பல்கலைகழகங்களின் அதிகாரத்தை குறைத்தல்:
 இந்தியாவில் 800 பல்கலைக்கழகங்கள் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன . இந்தியாவில் உயர்கல்வியியல் துறையில் வளர்ச்சி விகிதம் 28% மட்டுமே, தமிழ்நாட்டில் அது 49% உள்ளது. இந்தக் கொள்கையின் படி 2030க்குள் 50% வரை வளர்ச்சியை  எட்ட வேண்டும் என இலக்கை நிர்ணயித்துள்ளது மத்திய அரசு. ஆனால் அப்படி கூறிக்கொண்டே 40,000 கல்லூரிகளை 20,000 ஆக குறைக்க திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கிறது. உயர்கல்வியில் கற்றல் சதவீதத்தை உயர்த்த கல்வி நிலையங்களை உயர்த்தாமல், அருகமை கல்வி நிலையங்களை உருவாக்காமல் இருப்பதையும் மூடுவதற்கு மூடுவிழா நடத்துகிறது. அது மட்டுமின்றி  ஒரு பக்கம் உள்நாட்டு கல்வி நிறுவனங்களை மூடிவிட்டு வெளிநாடுகளில் அந்த நாடுகளால் எங்கள் நாட்டுக்கு கல்வி கொடுக்க  உங்களுக்கு தகுதியே இல்லை பலரை விரட்டியிருக்கின்றனர். அவர்களையெல்லாம் இந்தியாவிற்குள் கல்லூரி, பல்கலைகழகங்களை  துவங்க எல்லா சலுகைகளையும் கொடுத்து சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது மத்திய அரசு. தனியார் பல்கலைக்கழகங்கள் தங்கள் கட்டணத்தை தாங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் இவ்வறிக்கை சுதந்திர கொள்ளையை ஆதரித்து உள்ளது. இதுமட்டுமின்றி இளங்கலை பட்டப் பிரிவில் மூன்று ஆண்டு முடித்தால்தான்  பட்டம் என்ற நிலையை மாற்றி ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு சான்றிதழ் கொடுக்கப்படும் விருப்பப்பட்டவர்கள் குறிப்பிட்ட ஆண்டு முடித்துக் கொள்ளலாம் என்ற சுதந்திரத்தையும் வழங்குகிறது.
மூன்றான்று பட்டப்படிப்பை நான்கு ஆண்டாக  உயர்த்தியுள்ளது. இந்திய சமூகத்தில் பெரும்பான்மையான மாணவர்கள் எப்போது வேலைக்குச் செல்ல முடியும் என்ற மனநிலையில் இருக்கும் போது இத்தகைய அறிவிப்பு மாணவர்களை முழுமையான உயர்கல்வியை படிக்க விடாமல் பாதியிலேயே வெளியேற்றுவதற்கான செயல்முறையாகும். மத்திய அரசின் 2014ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி உயர்நிலைக் கல்வியில்  50.3% இடைநிற்றல் ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் பிடுங்கும் வகையில்  கல்லூரிகளை முழுமையாக தன்னாட்சி ஆக மாற்றுவது. இதன் மூலம் தனியார் கல்வி நிலையங்களில் கட்டணகொள்ளை மற்றும்  ஆணவபோக்கு அதிகரிக்கும்.
 தொழிற்கல்வியா? குலக்கல்வியா??
மூன்றாம் வகுப்பிலிருந்தே ஒரு குழந்தை ஒரு தொழில் சார்ந்த கல்வியைப் பயில வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது NEP2020. எட்டாம் வகுப்பை நிறைவு செய்யும்போது தொழிற்கல்வி மற்றும் கல்வியியல் கல்வி ஆகியவற்றை சேர்த்து முன்னேறவேண்டும்.  எட்டாம் வகுப்பில் விருப்பப்பாடமாக ஒரு தொழிற்கல்வி தேர்வு செய்து படித்து வேலைக்குப் போகலாம் என்றும் வழி காட்டுகிறது. இது தொழிற்கல்வி என்ற போர்வையில் குலக்கல்விக்கு வர்ணம் பூசி புகுத்தும் வேலையே அன்றி வேறன்று. இந்திய சமூகத்தில் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் மிகச் சிறிய வயதிலேயே சமூக பொருளாதார பின்னணி காரணமாக வேலைக்கு சென்று விடுகின்றனர். அதையும் தாண்டி கல்வி கற்க வருவோரின் எண்ணிக்கை அரிதாக உள்ளது. குறிப்பாக மத்திய அரசின் தரவுகளின்படி 2014ஆம் ஆண்டு பிரைமரி தொடக்கக் கல்வியில் 22.3 சதவீதமும் ஆரம்ப கல்வியில் 40.8 சதவீதமும் இடைநிற்றல் ஏற்பட்டுள்ளது.  வேலைக்கு சென்று விடுவதாலும் மற்ற சில சமூக பொருளாதாரப் பின்னணியும் இதற்கு காரணமாகும்.  இந்த நிலையில் இந்த அறிவிப்பானது மேலும் இடைநிற்றலுக்கு வழிவகுக்கும். ஒரு பெற்றோரின் நிலையிலிருந்து நோக்கினாள் "தான் பெறாத கல்வியை தன் பிள்ளை பெற்று தன் கஷ்டம் அடையக்கூடாது" என்பதாகவே இருக்கும் போது எட்டாம் வகுப்பிலேயே தொழில் கல்வியை புகுத்தினால் கண்டிப்பாக ஏழை எளிய மாணவர்களின் மனம் தொழில்களை நாடுமே அன்றி படிப்பை அல்ல.. ஏழை எளிய மாணவர்கள் மட்டும் இந்த தொழிலுக்கு போகட்டும் குறிப்பாக தன் தந்தை செய்யும் அல்லது குடும்ப தொழிலுக்கோ போகட்டும்,  வசதி படைத்தவர்கள் உயர்கல்வியை பெறட்டும் என்ற அடிப்படையிலேயே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச முடிவெடுக்கும் வயது 18 ஆகவும் ,அதற்கும் கீழாக 16 ஆகவும் இருக்கும்போது எட்டாம் வகுப்பு பயிலும் 13 வயது மாணவனை வாழ்க்கை கல்வியை தேர்வு செய்ய சொல்வது கட்டாய வன்முறையாகும்.
தேர்வு முறை : 
இந்தப் பகுதி தான் முக்கியமாக விவாதிக்க வேண்டிய ஒன்று.  3,5,8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு 9 முதல் 10 ஆம் வகுப்பு வரை செமஸ்டர் முறை இவ்வளவு படித்து முடித்தாலும் NEET,JEE தேர்வு போல கலை அறிவியல் கல்லூரிகளில் நுழைவதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்றும்  இவ்வறிக்கை கூறுகிறது. இத்தேர்வுகள் NTA என்ற தேசிய தேர்வு முகமை ஒருங்கிணைத்து நடத்தும். இந்த தேர்வு முகமை அரசால் உருவாக்கப்பட்டு தனியாரால் நிர்வகிக்கப்படும் ஒரு அமைப்பாகும். குறிப்பாக இந்த தேர்வுகள் எல்லாம் மத்திய பாடத்திட்டத்தில் நடத்தப்படும் தேர்வுகளாகும். மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்கள் இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாது. குறிப்பாக சமூக ரீதியாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களால் இந்த தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் பள்ளிக் கல்வியோடு இடைநிற்றல் செய்வார்கள் இதைத்தான் அரசாங்கமும் எதிர்பார்க்கிறது என்று சொன்னால் மிகையாகாது. இது ஒரு வடிகட்டல் முறையே அன்றி வேறன்று. கல்வியில் முன்னேறிய முதலில் உள்ள பின்லாந்து போன்ற நாடுகள் குறிப்பிட்ட வயது வரை தேர்வே இல்லாமல் முன்னேறியிருக்க, மூன்றாம் வகுப்பிலிருந்து தேர்வை துவக்கி மாணவர்கள் மீதான வன்முறையை  ஏவுகிறது அரசு. இந்தியாவில் 2014,15,16 ஆம் ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 2,500 மாணவர்கள் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 கோச்சிங் சென்டர் அரசியல்..
 புதிய கல்விக் கொள்கை முழுவதுமாக தனியார் கோச்சிங் சென்டர்களை ஊக்குவிப்பதாகவே உள்ளது. குறிப்பாக ஏற்கனவே கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களில் இந்தியா முழுவதும் ஆகாஷ் பவுண்டேஷன் என்ற ஒரு கோச்சிங் சென்டர் சேர்ந்த மாணவர்களே அதிகம். 50 ஆயிரம் தொடங்கி பல லட்சம் வரை  வசூல் செய்கின்றனர் இந்த கோச்சிங் சென்டர்கள். இப்போது NTA நடத்தும் அனைத்து வகையான தேர்வுகளில் தேர்ச்சி பெறவும், இந்த போட்டியான கல்விமுறையை எதிர்கொள்ளவும் கண்டிப்பாக கோச்சிங் சென்டர்களை நாட பெற்றோர்கள் தள்ளப்படுவார்கள். ஏற்கனவே புற்றீசல் போல பரவியுள்ள கோச்சிங் சென்டர்கள் பல்கிப் பெருகவே இந்த கல்விக் கொள்கை வழிவகுக்கிறது.
 மாநில சுயாட்சி..
 கடந்த ஆறு ஆண்டுகளில் மத்தியில் ஆளும் பிஜேபி அரசு மாநில சுயாட்சியை முற்றிலுமாக அழிக்கும் செயலை எல்லா வகையிலும் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கல்வியில் மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.   கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியதில் தொடங்கி  இன்றுவரை இந்திய கல்விமுறை முற்றிலுமாக சிதைக்கப்பட்டு விட்டது. ஆனால் தமிழகம் இதற்கு ஒரு விதிவிலக்காக இருந்தாலும்  அதையும் அழித்தே தீருவோம் என்று கங்கணம் கட்டி அழைகிறது மத்திய அரசு. 2016 ஆம் ஆண்டு நீட் தேர்வு மூலம் மாநில மருத்துவ இடங்களை நிரப்புவதற்கு மாநிலத்திற்கான அதிகாரங்களை பிடுங்கியது மத்திய அரசு. அதுமட்டுமின்றி இதர மத்தியத்துவப்படுத்தப்பட்ட தேர்வுகள் அனைத்தும் மாநில சுயாட்சிக்கு எதிரானதே. 
தற்போதைய கல்வி கொள்கையின்படி  அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் தேர்வு என்று அறிவிப்பது, பல்கலைக்கழகங்களின் பட்டம் அளிக்கும் அதிகாரத்தை பறிப்பது போன்ற செயல்கள் மூலம் மாநில கல்வி வாரியங்களின் அதிகாரத்தை நீர்த்துப் போகச் செய்கிறது. அரசியலமைப்பு சட்டம் 246 7 அட்டவணை 2 உட்பிரிவு  32வது பத்தியில் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவது,கலைப்பது,மாணவர் சேர்க்கைக்கான  தகுதியை நிர்ணயிப்பது மாநில அரசு மற்றும் அந்த பல்கலைக்கழகத்தின் அதிகாரமாகும். ஆனால் அந்த உரிமையை முற்றிலுமாக சிதைத்து தேசிய அளவிலான கல்லூரி மாணவர் சேர்க்கை தேர்வை திணிக்க முயற்சிக்கிறது மத்திய அரசு. கல்வி என்பது வட்டார,மாவட்ட,மாநில பாரம்பரியம் மற்றும் வரலாறு அறிவியல் பார்வை உலகளாவிய அறிவு ஆகியவற்றை சார்ந்து இருத்தல் வேண்டும் தன் மண்சார்ந்த பாரம்பரிய கல்வி என்பது ஒரு குழந்தைக்கு அவசியமாகிறது ஆனால் நாடு முழுவதும் ஒரே கல்வி முறையை புகுத்தக் முயற்சிப்பதன் மூலம் மாநில பாரம்பரியத்தை  வரலாறை  சிதைத்து தங்களது அஜண்டாவான காவி சித்தாந்தத்தை உட்புகுத்துவதற்கான வழியாக புதிய கல்விக் கொள்கையை கையாண்டுள்ளது மத்திய அரசு. 
ஒற்றைத் தலமை:
இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களான UGC, NAAC, AICTE ஆகியவற்றை ஒன்றாக இணைத்து இந்திய உயர் கல்வி ஆணையமாக அமைக்க முடிவு செய்துள்ளது. இதன் கீழ் national higher education regulatory council (NHERC), higher education grants council(HEGC), national accrediation council(NAC), general education Council (GEC) ஆகிய கிளை அமைப்புகளின் மூலம் இந்திய கல்வி துறையை ஒற்றை தலைமையின் கீழ் கொண்டுவந்து மாநிலங்களின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் செயழிலக்க செய்யும் சதியை செய்துள்ளது மத்திய அரசு. 
சமூக நீதி :
 தமிழகம் சமூக நீதிக்கான மண்ணாக தொடர்ந்து இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்தியா முழுவதும்  சமூகரீதியில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வெவ்வேறு அளவுகளில் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் 69% (50+18+1) என்ற விகிதத்தில் உள்ளது. இதை சிதைப்பதற்காகவே சமூகநீதியை பற்றி மறந்தும் கூட பேசாத கல்விக் கொள்கையாக இக்கொள்கை வார்த்தெடுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு விட்டு அரசுக்கு இருக்கும் பொறுப்புகளை  லாவகமாக தவிர்த்து உள்ளது. இட ஒதுக்கீட்டு கொள்கைகளை முறையாக அமல்படுத்துவது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை . 
அதை முற்றிலுமாக ஒழிப்பதற்கான வேலையை கடந்த ஆண்டுகளிலேயே ஆரம்பித்து விட்டது மத்திய அரசு . RUSA திட்டத்தின் அடிப்படையில் பொதுப்பட்டியல் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை 2018-19 இல் 2300 கோடியாகவும் அது அப்படியே 2020-21 ஆம் ஆண்டில் 300 கோடி ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. பட்டியலின மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் ஊக்கத்தொகை 2019-20 இல் 402 கோடியாகவும் , அதே 2020-21இல் 50 கோடி ஆகவும் , எஸ்டி மாணவர்களுக்கு 2019-20 222 கோடியாகவும் 2020-21 இல் 25 கோடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது. பெண் கல்வி பற்றி வானளவு பேசும் அறிக்கை நடைமுறையில் என்ன செய்யும் என்பதை கடந்தகால வரலாற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். "பேட்டி பச்சாவ் பேட்டி பதாவ்"என்ற திட்டத்தின் மூலம் 2019ல் ஒதுக்கப்பட்ட 250 கோடி சுருக்கப்பட்டு 2020-21இல் 200 கோடியாக மாறியது.  National scheme of incentive to girls for secondary education போன்ற திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. தமிழகத்தில் கலைஞர் ஆட்சியில் 8வது வகுப்பை தாண்டும் பெண்களுக்கு 5000ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.ஐசிடிஎஸ் திட்டத்தின்  700,800 கோடிகளையும் முற்றிலுமாக வெட்டி விட்டார்கள். இப்படி கடந்த காலங்களில் எல்லாம் மானியங்கள் மற்றும் திட்டங்களையும் ஒழித்துவிட்டு கல்விக் கொள்கையில் நாங்கள் இதையெல்லாம் செய்து விடுவோம் என்பது நீரில் எழுதுவது போன்று உள்ளது.
 சொல்வதை செய்வார்களா??
"MULTIDESICIPLINARY" என்று அழைக்கப்படும் ஒரே வளாகத்தில் பல்துறை கல்வி என்பது பல ஆண்டுகளாக கல்வியாளர்களின் கோரிக்கை. ஆனால் கல்வியில் பப்பாதி கூட வளராத சமூகத்தில் இதை எப்படி அமல் படுத்துவார்கள்? அப்படியானால் இவர்கள் "கொடுக்க நினைக்கின்ற" என்று சொல்லப்படும் கல்வியானது யாருக்கானதுஎன்று தெளிவுபடுகிறது. ஒருபுறம் தாய்மொழி கல்வியை ஆதரிப்பதை வரவேற்றாலும் இதை கண்துடைப்பாக கொண்டு மும்மொழி கொள்கை திட்டத்தை திணிக்கிறார்களோ என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆசிரியர்களின் தரம் உயர்த்துவது தேவை என்ற போதிலும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை தன்னாட்சி ஆக்குவதும் , கற்றல் வருடங்களை அதிகப்படுத்துவதும் முறையாக இருக்காது. இப்படியாக பல்வேறு ஓட்டைகளை கொண்டு வருங்கால நவீன சந்தை கூலிகளை உருவாக்கும் வணிக நோக்கிலும் , மனுதர்மத்தின் கொள்கைகளை சாதியபாகுபாடுகளையும் முழுமையாக  உட்புகுத்தியும் உருவாக்கப்பட்டுள்ள இந்திய கல்வியை இருண்ட காலத்திற்கு இட்டுச்செல்லும் சனாதான கொள்கையாம் இந்த புதிய(பழைய) கல்வி கொள்கையை ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தின் மாநிலங்களும் ஓரணியில் திரண்டு  எதிர்க்க வேண்டும். குறிப்பாக இதே நேரத்தை பயன்படுத்தி கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரும் மாநில சுயாட்சியை பாதுகாக்கும் கோரிக்கைகளையும் சேர்த்து குரலெழுப்ப வேண்டும்.

-சுபாஷ் 
மாவட்ட தலைவர் 
இந்திய மாணவர் சங்கம் 
தென்சென்னை